×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிகிறது: நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக, அதிமுக, பாஜ கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்றும் திமுக, பாஜ, சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்கள் 33 பேர் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்துள்ளனர். நேற்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (27ம் தேதி) இறுதி நாள். அதன்படி இன்று மாலை 3 மணி வரை வேட்புனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 3 மணிக்குள் வரும் வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதற்கு பிறகும்கூட மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால், 3 மணிக்கு பிறகு வரும் வேட்பாளர்கள் யாரும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று மனு தாக்கல் செய்கிறார். சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இன்று மனுதாக்கல் செய்கிறார். அதேபோன்று காங்கிரஸ் வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக வரும் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் விரிவாக செய்து உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்கள் பிரச்னை இல்லை. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்படும். மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் முடிவு செய்து வேட்பாளரின் சம்மதத்துடன் வேறு சின்னங்களை ஒதுக்கும். ஒரே சின்னத்தை 2 சுயேச்சைகள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கப்படும். வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறும். 30ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதன்பிறகு ேதர்தல் பிரசாரம் மேலும் தீவிரமடையும்.

The post தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிகிறது: நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...