×

ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி

*திட்டக்குடி அருகே பரிதாபம்

திட்டக்குடி : திட்டக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியாயினர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ஆவட்டி அருகே உள்ள பாசார் கிராமத்தை சேர்ந்தவர் திலிப்குமார் மகன் சதீஷ்குமார்(20). இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பரணி (20). இவர் சென்னையில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களின் நண்பர் நடராஜன் மகன் வெங்கடேசன் (20), திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களான மூவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.

நேற்றுமுன்தினம் இவர்கள் மூவரும் தங்களின் நண்பர்களை பார்ப்பதற்காக பக்கத்து ஊருக்கு சென்று விட்டு நேற்று அதிகாலையில் ஒரே பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அதிகாலை 1.15 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

வாகனம் மோதியதில் பைக் சாலையில் கவிழ்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இவர்களில் சதீஷ்குமார், பரணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வெங்கடேசன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சென்று விபத்தில் பலியான நண்பர்கள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேப்பூர் அரசு மருத்துவமனையில் பலியான வெங்கடேசன் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் மூன்று பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Parithapam ,Thittakudi ,Aavatti ,Ramanantham, Cuddalore district ,
× RELATED கடலூரில் பரிதாபம் ஆட்டோ மீது லாரி மோதல் டிரைவர் உள்பட 2 பேர் பலி