×

நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து பெண் தற்கொலை: வழக்கறிஞர், மனைவி, மகன் கைது

புழல்: நிலத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கறிஞர், அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். சோழவரம் கோட்டைமேடு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நாகபூஷணம் அம்மாள்(55). இவரது குடும்பத்துக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த வழக்கறிஞர் அம்பேத் குமார்(54) குடும்பத்திற்கும் பல ஆண்டாக நில பிரச்னை இருந்து வந்துள்ளது.

அம்பேத்குமார், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மன உளைச்சல் உண்டாக்கும் வகையில் நாகபூசணத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மன அழுத்தத்தில் இருந்த நாகபூசணம் நேற்று முன்தினம் இரவு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறி துடித்து அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை நாகபூசணம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள ஜிஎன்டி சாலையில் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகபூஷணம் அம்மாள் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் வழக்கறிஞர் அம்பேத்குமார், அவரது 2வது மனைவி பவித்ரா(44), மகன் சச்சின்(19) ஆகிய 3 பேரையும் சோழவரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து பெண் தற்கொலை: வழக்கறிஞர், மனைவி, மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Nagabhushanam Ammal ,Ambedkar Street, Cholavaram ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...