×

நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே புதிய தண்டவாளத்தில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம்

*நாளை நடக்கிறது

நாகர்கோவில் : நாகர்கோவில் சந்திப்பு – ஆரல்வாய்மொழி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில், நாளை அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது.

இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் சென்று வருகின்றன. தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.அடுத்த கட்டமாக மதுரை – நாகர்கோவில் வரை உள்ள பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும் செயல்படுத்த முடிவு செய்து பணிகள் தொடங்கின.

இந்த திட்டத்தில் ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையிலான 102 கி.மீ. தூர திட்ட பணிகள் மிக வேகமாக நடந்தன. நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் பாதையில், ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் பகுதிகளில் மட்டும் பணிகள் பாக்கி இருந்தன. இதில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. சிக்னல்கள், மின் இணைப்பு கேபிள்கள் பதிக்கும் பணிகளும் மிக வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மேலப்பாளையம் முதல் திருநெல்வேலி வரையிலான இரட்டை ரயில் பாதைக்கான புதிய தண்டவாளத்தில் பணிகள் கடந்த வாரம் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது.நாகர்கோவில் சந்திப்பு – திருநெல்வேலி வழித்தடத்தில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு இடையே பணிகள் முடிவடைந்துள்ளன. இதே போல் கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது நாகர்கோவில் சந்திப்பு – ஆரல்வாய்மொழி இடையே பணிகள் முடிவடைந்து உள்ளதை தொடர்ந்து, நாளை (26ம்தேதி) அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடக்க இருக்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், நாகர்கோவில் சந்திப்பு மற்றும் ஆரல்வாய்மொழி இடையே புதிய அகல இரட்டை வழித்தடத்தில் நாளை (26ம்தேதி) பகல் 2 மணி முதல் மாலை 6 மணி இடையே ஒரு சிறப்பு ரயிலை கொண்டு ஆரல்வாய்மொழி முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை அதி விரைவு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம், பெங்களூரு) மேற்பார்வையில் இந்த சோதனை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அங்கீகாரம் பெறாத நபர்கள், அதிவிரைவு சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் இந்த இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே லைன்களில் அணுகுவதோ அல்லது அருகாமையில் பணி செய்வதோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-சென்னை இரட்டை ரயில் பாதை ரெடி

நாகர்கோவில் சந்திப்பு – ஆரல்வாய்மொழி இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை முடிவடைந்து விட்டால், நாகர்கோவில் முதல் சென்னை வரையிலான இரட்டை ரயில் பாதை முற்றிலும் பணிகள் முடிவடைந்ததாக கருதப்படும். இதையடுத்து புதிய தண்டவாளத்தில் ரயில்கள் இயங்க தொடங்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ரயில்கள் தாமதம்

இதற்கிடையே நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு – ஆரல்வாய்ெமாழி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், வந்து சேரும் ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக இயக்கப்படுகின்றன.

நேற்றும் 3 வது நாளாக ரயில்கள் தாமதம் ஆனது. சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி வரை இயங்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தது. இதே போல் அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – ராமேஸ்வரம் ரயில், சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்றது. பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் தாமதமாக வந்தன. நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற ரயில்களும் தாமதம் ஆகின.

The post நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே புதிய தண்டவாளத்தில் அதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Aralwaimozhi ,Nagercoil Junction ,Tamil Nadu ,Aralvaimozhi ,Dinakaran ,
× RELATED ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது மினிலாரி மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் காயம்