×

2014க்கு முன் இருந்த நாட்கள் போதும் மோடியின் நல்ல நாட்கள் வேண்டாம்: சஞ்சய் ராவத் ஆவேசம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவர் சரத் பவார் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் சஞ்சய் ராவத், பாலாசாகேப் தோரட் மற்றும் சுப்ரியா சூலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சரத் பவார், ‘‘நாட்டில் தற்போதுள்ள சூழல் வித்தியாசமானது. வருகிற மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயிகளின் வருமானம் 2024ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று பிரதமர் ஒரு முறை உறுதியளித்திருந்தார்.

ஆனால் அது நிகழவில்லை. ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் விவசாயிகளை பற்றி கவலைப்படுவதில்லை. 2022ம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பேசியதால் சேனா (யூபிடி) தலைவர் ராவத் அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடின உழைப்பு இருந்தபோதிலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். கடந்த தேர்தலில் பாஜ 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. மீதமுள்ளவை கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருந்தது.. எங்களை மிரட்ட வேண்டாம்.

நாங்கள் எதற்கும் பயப்படப்போவதில்லை.அடுத்த நான்கு மாதங்களில் நாட்டில் ஆட்சி மாற்றத்தை காணலாம்” என்றார். இதனை தொடர்ந்து பேசிய எம்பி சஞ்சய் ராவத், ‘‘எங்களுக்கு உங்களது அச்சே தின் (நல்ல நாட்கள்) வேண்டாம். 2014ம் ஆண்டுக்கு முன் இருந்த நாட்களை எங்களுக்கு கொடுங்கள். ஏக்நாத் ஷிண்டே எங்களை விட்டு பிரிந்த பிறகு எங்கள் கட்சி வலுவாக தான் வளர்ந்துள்ளது”என்றார்.

The post 2014க்கு முன் இருந்த நாட்கள் போதும் மோடியின் நல்ல நாட்கள் வேண்டாம்: சஞ்சய் ராவத் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Sanjay Rawat ,Pune ,India Alliance ,Balasaheb Thorat ,Supriya Sula ,Nationalist Congress Party ,Indapur ,Pune district, Maharashtra ,Sarath Bawar ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...