மும்பை: பிரதமர் மோடி மகாபாரத்தில் வரும் கம்சனை போன்ற நபர் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின்(யூபிடி) அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடியை விமர்சித்து தலையங்கம் வெளியாகி உள்ளது. இதில் கூறியிருப்பதாவது; அமலாக்கத்துறையினரால் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு சர்வாதிகாரி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் என்பதால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பிரதமர் மோடி மகாபாரதத்தில் வரும் கம்சனை போன்றவர். கம்சன் யாரை பார்த்து எல்லாம் அஞ்சினானோ அவர்களை சிறையில் அடைத்தான். இறுதியில் கம்சனை ஒழிப்பதற்கு கிருஷ்ணர் அவதரித்தார். மோடி பயப்படுகிறார். எனவே தான் எதிர்கட்சி தலைவர்களை அவர் சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்கிறார்.
அவுரங்கசீப் எதிரிகளை தனது அடிமைகளாக்கி கொள்வார் அல்லது அவர்களை ஒழித்துக்கட்டுவார். நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசிலும் இதேபோன்ற போக்கை காணலாம். எதிர்கட்சிகளில் குரல் இருக்கக்கூடாது என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை கேடு விளைவிப்பதாக இருக்கிறது. சீனாவிலும், ரஷ்யாவிலும் எதிர்கட்சி தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது மாயமாகிறார்கள். ஆனால் இந்தியாவில் எதிர்கட்சி தலைவர்கள் பொய் வழக்குகளில் சிக்கி மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மோடி பயப்படுகிறார்: சிவசேனாவின் சாம்னா விமர்சனம் appeared first on Dinakaran.