×

தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம் நீச்சல் குளத்தில் மூழ்கி மகள் பலி; தோழி சீரியஸ்: முட்டுக்காடு ரிசார்ட்டில் பரிதாபம்

துரைப்பாக்கம்: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் பண்ணை வீடுகள், ரிசார்ட்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்குள்ள ரிசார்ட் மற்றும் பண்ணை வீடுகளில் உரிய அனுமதி பெறாமல் பிறந்தநாள் கொண்டாட்டம், பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு போதிய பாதுகாப்பில்லாமல் மது அருந்துவது, நீச்சல்குளத்தில் குளிப்பதால் அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில், அண்ணாநகர் வாசன் யூ அப்பார்ட்மென்ட் பகுதியை சேர்ந்த அனுசத்யா (31) என்பவர், தனது தாய் பிரேமாவின் பிறந்த நாளை கொண்டாட உறவினர்கள், தோழிகளுடன் நேற்று முட்டுக்காடு சென்றுள்ளார். பின்னர், பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மதுபோதையில் தோழிகளுடன் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் அனுசத்யா குளித்துள்ளார். இதில் தோழியான சைலஜா (29) என்பவரும், அனுசத்யாவும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிசார்ட் காவலாளி பகதூர் மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோர் நீச்சல் குளத்தில் குதித்து இருவரையும் மீட்டனர்.

பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அனுசத்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சைலஜா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுசத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது முட்டுக்காடு ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி மகள் இறந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 

The post தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம் நீச்சல் குளத்தில் மூழ்கி மகள் பலி; தோழி சீரியஸ்: முட்டுக்காடு ரிசார்ட்டில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Doshi ,Muttukadu Resort ,Durai Pakkam ,Chennai ,Muttukkadu Resort ,
× RELATED கிச்சன் டிப்ஸ்