×

ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ் கொடுத்து 27 ஆண்டாக பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

*கல்வி அதிகாரி போலீசில் புகார்

ஏற்காடு : ஏற்காடு மலை கிராமத்தில் போலி சான்றிழ்கள் கொடுத்து, 27 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர், உண்மை கண்டறியும் சோதனையில் சிக்கினார். இது குறித்து வட்டார கல்வி அலுவலர் கொடுத்த புகாரின், போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக, சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது, வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத், நேற்று ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:தலைமை ஆசிரியர் வெங்கடேசன், 10ம் வகுப்பு முதல், பிஎட்., வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து, கடந்த 1997ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் மேல் சந்தேகம் ஏற்படவே, சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன், 10 மற்றும் 12ம் வகுப்பு, பிஎட்., படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரியவந்துள்ளது. போலி சான்றிதழ் கொடுத்து, அரசு பள்ளிகளில் 27 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சொந்த ஊருக்கு சென்றுள்ள அவரை தேடி வருகின்றனர்.

The post ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ் கொடுத்து 27 ஆண்டாக பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,
× RELATED ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்