×

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி… பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்!!


சென்னை : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பியதுடன், கண்டனமும் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முன்வந்தார். இந்த நிலையில், கிண்டி ராஜ்பவனில் பதவியேற்பு விழா மிக எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பொன்முடியை அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீண்டும் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி… பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Chennai ,Higher Education ,Minister ,Supreme Court ,Goldhair ,Governor ,K. Stalin ,Bonmudi ,education ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...