×

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு என 3 நிலைத் தேர்வுகள் நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர்.  இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வுகளை மே 26ம் தேதி நடத்த தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவு ஜூன் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மே 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு, ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,IPS ,Union Public Service Commission ,UPSC ,Dinakaran ,
× RELATED 2023-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ்...