×

அம்பத்தூர், பொன்னேரி பகுதிகளில் விடிய விடிய சோதனை நடத்திய பறக்கும் படையினர்

 

அம்பத்தூர்: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம், பரிசுப் பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சென்னை அண்ணா நகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அமைந்தகரை அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம், சேத்துப்பட்டு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் விடிய விடிய பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறக்கும் படை குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 3 போலீசாரும் நிலையான கண்காணிப்புக் குழுவில் ஒரு அரசு அதிகாரியும் 2 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இக்குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர் முக்கிய சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை யாரேனும் கொண்டு செல்கின்றனரா என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழச்சி முறையில் தீவிர வாகன சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொன்னேரி: பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சி சுற்றுவட்டார இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் செல்லும் வாகனங்களில் தொடர்ந்து பணம், பரிசுப் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் சின்னத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை கொண்ட வாகனங்கள் வரும்போது உடனடியாக ஸ்டிக்கரை அகற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் பறக்கும் அதிகாரி சித்ரா தலைமையில் மீஞ்சூர் பேரூராட்சி மேற்பார்வையாளர் கோபி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சுவர் விளம்பரங்கள், சாலையோர தடுப்பதில் உள்ள விளம்பரங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றினர்.

The post அம்பத்தூர், பொன்னேரி பகுதிகளில் விடிய விடிய சோதனை நடத்திய பறக்கும் படையினர் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Ponneri ,Ampathur ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...