×

மகன் தனியாக விட்டுச்சென்ற நிலையில் கழுத்து அறுபட்டநிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை

சோழிங்கநல்லூர்: சென்னை காசிமேடு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கலா (62). இவருடைய கணவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பூ வியாபாரம் செய்து வந்த கலாவுக்கு ஆனந்தி (45) என்ற மகளும், சீனிவாசன் (43) என்ற மகனும் உள்ளனர். இருவரும் திருமணமாகி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கலாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. மகன் சீனிவாசன் வீட்டிற்குச் சென்ற கலாவை, நேற்று மீண்டும் அவரது வீட்டில் சீனிவாசன் விட்டுச் சென்றுள்ளார்.

அப்போது என்னை தனியாக விட்டுவிட்டு செல்லாதே என்று கலா அழுதுள்ளார். ஆனால், அவரை வீட்டில் விட்டுவிட்டு கதவை பூட்டி பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்து, தாயை பார்த்துக் கொள்ளுமாறு கூறி சீனிவாசன் சென்றுள்ளார். இதனையடுத்து தேவகி என்பவர் கதவை திறந்து உள்ளே சென்றபோது, கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கலா பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலா கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மகன் தனியாக விட்டுச்சென்ற நிலையில் கழுத்து அறுபட்டநிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Kala ,Kasimedu, Annanagar ,Chennai ,Anandi ,Srinivasan ,
× RELATED பச்சிளம் குழந்தை மர்மச்சாவு