×

வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை விற்று மது அருந்தியதால் ஆத்திரம்: மகன் கழுத்தை நெரித்து கட்டையால் அடித்து கொலை; போதையில் இறந்துவிட்டதாக நாடகமாடிய தாய் கைது

சென்னை: மதுக்குடிக்க பணம் இல்லாததால் வீட்டில் உள்ள சமையல் காஸ் சிலிண்டரை விற்று மது குடித்து மகனை கழுத்தைநெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது ெசய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவை சேர்ந்தவர் சாந்தி(58). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ்(40) என்ற மகன் இருந்தார். வெங்கடேஷ் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று காலை தனது வீட்டில் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது தாய் சாந்தி அளித்த தகவலின் படி அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாந்தி மது போதையில் கீழே விழுந்து சுயநினைவிழந்து இறந்துவிட்டதாக கூறினார். அதைதொடர்ந்து போலீசார் வெங்கடேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இற்கிடையே நேற்று மாலை வெங்கடேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் வெங்கடேஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வெங்கடேஷ் தாய் சாந்தியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வெங்கடேஷ் குடிக்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சாந்தி தனது மகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘மது குடிக்க பணம் இல்லாததால் நான் தான் காஸ் சிலிண்டரை எடுத்து சென்ற விற்று அந்த பணத்தில் மது குடித்தேன்’ என்று கூறியுள்ளார். இதனால் சாந்திக்கும் அவரது மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சாந்தியை அவரது மகன் தாக்க முயன்றார். அப்போது வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் தனது மகன் வெங்கடேஷை சாந்தி பலமாக தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்ததும், ஆத்திரம் அடங்காத சாந்தி, வெங்கடேஷை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. ஆத்திரத்தில் மகனை கொலை செய்ததை மறைக்க சாந்தி, மது போதையில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாக போலீசாரிடம் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து அசோக் நகர் போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து சாந்தியை அதிரடியாக கைது செய்தனர். சமையல் காஸ் சிலிண்டரை விற்று மது குடித்ததால் தனது மகனை அவரது தாயே அடித்து கொலை செய்த சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை விற்று மது அருந்தியதால் ஆத்திரம்: மகன் கழுத்தை நெரித்து கட்டையால் அடித்து கொலை; போதையில் இறந்துவிட்டதாக நாடகமாடிய தாய் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Shanti ,Brindavanam Street, West Mambalam, Chennai ,
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்