×

ஆலங்குளம் அருகே பயங்கரம் இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை

*அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரத்தில் தம்பி வெறிச்செயல்

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை அடுத்துள்ள செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சுபாவேணி, அய்யனார்குளத்தைச் சேர்ந்த அவரது அத்தை மகன் கருப்பசாமி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுருதிமாதவ் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

சுபாவேணி தனது கணவர் உறவினருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவரிடம் இருந்து பிரிந்த சுபாவேணி குழந்தையுடன் செட்டிகுறிச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். கருப்பசாமியும் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததால் தந்தை மாரியப்பன், மகன்கள் வேல்முருகன், மகேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஊருக்கு அருகேயுள்ள தோட்டத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாரியப்பன் மனைவி லட்சுமி தோட்டத்திற்கு சென்றபோது அவருடன் சுபாவேணி தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு அவர் தாயுடன் உட்கார்ந்து இருந்தபோது சுபாவேணிக்கு போன் வந்துள்ளது. இதனால் அவர், குழந்தையை தாய் லட்சுமியிடம் கொடுத்து விட்டு கிணற்று அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த அவரது தம்பி மகேஸ்வரன், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அக்கா செல்போனில் பிறரிடம் பேசுவதை நிறுத்தவில்லையே என்கிற ஆத்திரத்தில் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சுபாவேணியை சரமாரியாக வெட்டியுள்ளார். கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த வெட்டுப்பட்ட சுபாவேணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து மகேஸ்வரன் தப்பியோடிவிட்டார்.

தகவலின் பேரில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மாதவன், எஸ்ஐ மாடசாமி, தனிப்பிரிவு ஏட்டு சொரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாவேணியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காவை வெட்டிக்கொலை செய்த மகேஸ்வரனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆலங்குளம் அருகே பயங்கரம் இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Chettikurichi School Road ,Alankulam, Tenkasi District ,Marantha ,
× RELATED ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!