×

வலசையூரில் குடும்ப தகராறில் கடைக்குள் புகுந்து தாய், மகன் மீது தாக்குதல்

*காதல் மனைவி மீது புகார்

சேலம் : சேலம் அடுத்த வலசையூரில் குடும்ப தகராறில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்திய காதல் மனைவியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் வீராணம் அடுத்த வலசையூரைச் சேர்ந்தவர் ராணி (47). நேற்று மாலை தனது மகன் பாலாஜி (25) என்பவருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து பாலாஜி கூறியதாவது:

நானும், அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தைச் சேர்ந்த பிரியா (22) என்பவரும் காதலித்தோம். கடந்த 2020ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். தற்போது தைலானூர் பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறோம். இதனிடையே எங்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி எங்களது கடைக்கு வந்த பிரியா மற்றும் அவரது உறவினர்கள் சிலர், படிப்பு சான்றிதழ்களை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மூலமாக அதனை தருவதாக நான் கூறினேன்.

அப்போது திடீரென என்னை சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க வந்த எனது தாயாரையும் அடித்து மிரட்டினர். மேலும், கடையில் இருந்து பொருட்களை சூறையாடினர். இதற்கு ஆதாரமாக சிசிடிவி வீடியோ பதிவுகள் உள்ளன. இதில் காயமடைந்த தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரித்து, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வலசையூரில் குடும்ப தகராறில் கடைக்குள் புகுந்து தாய், மகன் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Valasayur ,Salem ,Rani ,Salem Veeranam.… ,Dinakaran ,
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்