×

பிரிந்து சென்றவரை சேர்த்து வைக்கக்கோரி காதல் கணவரின் வீட்டு முன்பு கர்ப்பிணி மனைவி போராட்டம்

*ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, அவரது வீட்டு வாசலில் அமர்ந்து, கர்ப்பிணி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மலையாண்டி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் கோகுலகிருஷ்ணன் (24). பொறியியல் பட்டதாரியான இவர், ஓராண்டுக்கு முன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது சூலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சவுந்தர்யாவுடன் (26) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கோகுலகிருஷ்ணன் பணிக்கு சேர்ந்தார். அங்கு தனியாக வீடு எடுத்து மனைவியுடன் குடும்பம் நடத்தினார். தற்போது சவுந்தர்யா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.கடந்த டிச.8ம் தேதி தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை என மனைவியிடம் தெரிவித்து விட்டு, கோகுலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்தார். அதன்பின் ஓசூருக்கு திரும்பி செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் மனைவியை தொடர்பு கொள்ளாமல் இருந்தார். இதனால் சந்தேகமடைந்த சவுந்தர்யா கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, க.விலக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து கோகுலகிருஷ்ணனை தேடி வந்தனர். மேலும், கணவரை கண்டுபிடித்து தரக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து கோகுலகிருஷ்ணன் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை. மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் பிரிந்ததாக தெரிவித்தார். இதையடுத்து ஆட்கொணர்வு மனு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில், மலையாண்டிநாயக்கன்பட்டியில் உள்ள கணவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த சவுந்தர்யா, அங்கு வாசலில் அமர்ந்து கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்து வந்த க.விலக்கு எஸ்ஐ பிருந்தா தலைமையிலான போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விசாரணைக்காக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post பிரிந்து சென்றவரை சேர்த்து வைக்கக்கோரி காதல் கணவரின் வீட்டு முன்பு கர்ப்பிணி மனைவி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Andipatti, Andipatti ,Andipatti ,Jayaraj ,Malayandi Nayakkanpatti, Theni district ,
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு