×

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

கடலூர், மார்ச் 16: கடலூரில் தந்தை இறந்த நிலையிலும், மாணவி பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல், ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மகள் ராஜேஸ்வரி (16). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், ரத்தின வடிவேல் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, நேற்று அதிகாலை வீட்டிலேயே உயிரிழந்தார். இதனால் மிகவும் துயரம் அடைந்த மாணவி கதறி அழுதார். இருப்பினும் நேற்று பிளஸ் 2 இயற்பியல் பொது தேர்வு நடந்ததால் அத்தேர்வு எழுதுவதற்காக அவர் பள்ளிக்கு வந்தார். மேலும் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ராஜேஸ்வரிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதையடுத்து ராஜேஸ்வரி தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்ததும் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அப்போது மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி பிளஸ் 2 தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வு எழுதிய மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இயற்பியல் பொதுத்தேர்வு நடந்தது. கடலூரில் உள்ள தனியார் பள்ளியிலும் நேற்று இயற்பியல் பொதுத்தேர்வு நடந்தது. இதில் தேர்வு எழுதிய ஒரு மாணவிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவருக்கு ஒரு செவிலியர் மூலம் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அந்த மாணவி இயல்பு நிலைக்கு திரும்பி தேர்வு எழுதினார். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Rathina Vadivel ,Surappanayakan ,Rajeshwari ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை