×

வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்ட பேக்கரி உரிமையாளர், ஊழியருக்கு வெட்டு, கொலை மிரட்டல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(63). இவர் ஸ்ரீபெரும்புதூர் சாலை மணவாளநகரில் ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று 14ம் தேதி மாலை 6.45 மணிக்கு பேக்கரியில் வெங்கடேசன் கேஷ் கவுன்ட்டரில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கேக் வாங்கியுள்ளனர்.

அப்போது அதற்கான பணத்தை கேட்டதற்கு, அந்த 3 பேரும், நாங்கள் யார் தெரியுமா என்றவாறு தகாத வார்த்தைகளால் பேசியபடி கடையில் பணிபுரியம் ஸ்ரீநாத் என்பவரை தாக்கியதோடு கத்தியாலும் வெட்டியுள்ளனர். இதை தடுத்ததால் இடது கையில் இரண்டு விரல்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க சென்ற உரிமையாளர் வெங்கடேசன் என்பவரையும் இடது பக்க தலையில் வெட்டி காயம் ஏற்படுத்தியதோடு, எங்களிடம் இனிமேல் பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயம் அடைந்த உரிமையாளர் வெங்கடசேன் மற்றும் ஊழியர் ஸ்ரீநாத்(20) ஆகிய இருவரும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கேக் வாங்கிக் கொண்டு பணத்தை தராமல் தகராறு செய்ததுடன், கத்தியால் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்ற மர்ம நபர்கள் மீது மணவாளநகர் போலீசில் பேக்கரி உரிமையாளர் வெங்கடேசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்ட பேக்கரி உரிமையாளர், ஊழியருக்கு வெட்டு, கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Venkatesan ,Kilanallathur ,Sriperumbudur Road Manavalanagar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...