×

ஆளுநர் டெல்லியில் இருந்து வந்த பின்பு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: ஆளுநர் டெல்லியில் இருந்து வந்த பின்பு பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதில் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்வதை தவிர்ப்பதற்காக கவர்னர் டெல்லி சென்றாரா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட பணி இருந்ததால், அவர் டெல்லி சென்றிருக்கலாம். டெல்லியில் இருந்து வந்த பின்பு பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கும், பொன்முடி அமைச்சராக பதவி ஏற்புக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

முதல்வர், யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து கவர்னருக்கு கடிதம் அனுப்புகிறாரோ, அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து அமைச்சராக கவர்னர் நியமிப்பார். இதுதான் நடைமுறை. அதில் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது. ஏனென்றால் ஏற்கனவே தேர்தல் நடைமுறை, நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் அமைச்சராக பதவியேற்ற முன் உதாரணம் உள்ளது. எனவே இங்கும் அதேபோல் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம். அதில் சட்ட ரீதியாக எந்த பிரச்னையும் ஏற்படாது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ள நடைமுறைதான், அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநர் டெல்லியில் இருந்து வந்த பின்பு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Ponmudi ,Delhi ,Speaker ,Appavu ,CHENNAI ,Tamil Nadu ,Legislative ,Assembly ,Indigo Airlines ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...