×

அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படும்: டிவில்லியர்ஸ் நம்பிக்கை

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படும் என்று ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த மூன்று ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து வந்த ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில், “ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான்.

அவர்கள் 5 முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி சர்ச்சை நிலவியது. ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக ரோகித் சர்மா இடத்திற்கு வந்தது, கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது மும்பை அணி அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருப்பது ஒரு நல்ல விஷயமாக நான் கருதுகிறேன். மும்பை அணி நிர்வாகமும் இதை விரும்பி இருக்கலாம். மும்பை அணிக்காக பும்ரா மீண்டும் விளையாடுகிறார். அவர் கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பிரமாதமாக செயல்பட்டார். பும்ரா போன்ற ஒரு வீரர் உங்கள் அணியில் இருக்க நீங்கள் எப்போதுமே விரும்புவீர்கள்.

ஐபிஎல் வரலாற்றிலேயே 10 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் அவர் உங்களுக்கு வெற்றியை தேடி கொடுப்பார். மும்பை அணி இவ்வளவு வெற்றிகரமான அணியாக இவ்வளவு ஆண்டு விளங்குகிறது என்றால் அது பும்ராவின் ஆதிக்கத்தால் தான். இம்முறை மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்குகிறது. அவர்களிடம் தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். மும்பை அணியில் டிவால்ட் பிரவீஸ் இருக்கிறார். அவருக்கு இம்முறை நிறைய வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். அது மட்டும் இல்லாமல் ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், டிம் டேவிட் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’’ என கூறினார்.

The post அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படும்: டிவில்லியர்ஸ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Mumbai Indians ,De Villiers ,Mumbai ,AB ,IPL T20 ,2024 IPL T20 cricket series ,De Villiers' ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...