×

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்-சீரமைக்க கோரிக்கை

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டி தெருவில் 4 முனை சந்திப்பு உள்ளது. இங்கு அவ்வப்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி அந்த பகுதி முழுவதும் தேங்கி நிற்கும். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் புகார் அளித்த பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து செல்கின்றனர். ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதற்காக அப்போது தார் சாலையில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சீரமைக்கின்றனர்.

அவ்வாறு சீரமைக்கும் பணியில் ஈடுபடும்போது அந்த சாலை முக்கிய சாலை என்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நேற்றும் இதேபோல அதே இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இந்த தண்ணீர் அந்த பகுதி முழுவதும் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படாதவாறு சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்-சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Tirupathitripuliyur Bodi Chetty Street, Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை