பெரம்பலூர், மார்ச்13: பெரம்பலூர் மாவட்டத்தில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை வழியாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 4ம்தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், குன்னம், வேப்பந்தட்டை வட்டங்களில் நத்தம் இணைய வழிபட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொது மக்கள் இ-சேவை மற்றும் https://tamilnilam.tn.gov.in/citizen வழியாக விண்ணப்பிக்கலாம். நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும். கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் citizen portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே பொது மக்கள் அனைவரும் இச் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.
The post நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.