×

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வாக்காளர் அட்டைகளை சாலையில் போட்டு கிராம மக்கள் திடீர் மறியல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தலைமுறை தலைமுறையாக பயிரிடப்பட்டு வரும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி, சாலையில் வாக்காளர் அட்டைகளை போட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்ப்பூர் கிராமத்தில் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 450 ஏக்கர் நிலங்களில் மூன்று போகம் விவசாயம் செய்து வருகின்றனர். பூர்விகமாக வாரிசுகளின் அடிப்படையில் உரிமம் பெற்ற ஆவணங்களுடன் நிலங்கள் இருந்து வந்தநிலையில் ரயத்துகளின் நிலங்கள் என குடியானவர்கள் நிலங்கள் என்று கூறி விவசாய நிலங்களை அனாதினம் என தவறாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் மிகுந்த கொந்தளிப்பில் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நிலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இது தொடர்பாக, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டா வழங்காததால் அந்த நிலங்களை வைத்து எவ்வித செயலும் செய்ய முடியாததால் அரசு அறிவித்த சலுகைகளும் பெற முடியாமல் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் தங்களது குடும்பத்துடன் செவிலிமேட்டில் இருந்து கீழம்பி செல்லும் புறவழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், கிராமமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கீழ்க்கதிர்பூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்க சென்றுள்ளனர். அப்போது, கிராம நிர்வாக அதிகாரி அடையாள அட்டையை வாங்க மறுத்ததால், வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறை மற்றும் வருவாய் துறையினர், தாசில்தார் புவனேஸ்வரன், அப்பகுதியில் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தபின் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

The post விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வாக்காளர் அட்டைகளை சாலையில் போட்டு கிராம மக்கள் திடீர் மறியல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kylkadirpur ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...