×

குழந்தை கடத்தும் ஆசாமி என தவறாக நினைத்து மகளுடன் வந்த தந்தைக்கு சரமாரி அடி உதை

பூந்தமல்லி: குழந்தை கடத்தும் ஆசாமி என தவறாக நினைத்து மகளுடன் வந்த தந்தையை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், தவறான தகவலை பரப்பிய குடிபோதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி முடிந்ததும் சரவணன் நேற்று முன்தினம் மாலை தன் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர்கள் சென்ற வழியில் மதுபோதையில் இருந்த 2 பேர், குழந்தையை கடத்திச் செல்கிறாயா என சரவணனிடம் கேட்டு, குழந்தை கடத்த வந்த மர்ம நபர் என கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் சரவணனை சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனிடையே சிறுமியிடம் விசாரித்தபோது, என்னை அழைத்துச் செல்பவர் என் தந்தை என கூறியுள்ளார். இதனைக் கேட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை சரவணன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் இருந்த இரு ஆசாமிகள் தவறான தகவல்களை பரப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். குழந்தை கடத்தும் ஆசாமி என கருதப்பட்டு மகளுடன் வந்த தந்தை, பொதுமக்களால் தாக்கப்பட்ட இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குழந்தை கடத்தும் ஆசாமி என தவறாக நினைத்து மகளுடன் வந்த தந்தைக்கு சரமாரி அடி உதை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Avadi ,Aavadi ,Tamil Nadu ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...