×

பூந்தமல்லி நகராட்சியில் ரூ.10 கோடியில் திட்ட பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சியில் ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பிலான நிறைவடைந்த பணிகள் மற்றும் புதிய திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. பூந்தமல்லி நகராட்சியில் 9, 11, 12, 4, 16, 18, 19 ஆகிய வார்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணை தலைவர் தர், நகராட்சி ஆணையர் லதா, திமுக நகரச் செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு, பூந்தமல்லி நகராட்சி பொது நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 கோடி மதிப்பிலான முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட ருக்மணி நகர் உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.7.52 கோடி மதிப்பில் புதிய சாலைகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பூமிபூஜை நடைபெற்றது. மேலும், ரூ.88 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா, ரூ.95.5 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம், ரூ.9.90 லட்சம் மதிப்பில் தியான மையம், ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.49 லட்சம் மதிப்பில் பகவதி குளம் சீரமைப்பு என நிறைவடைந்த பணிகள் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பூந்தமல்லி நகராட்சியில் ரூ.10 கோடியில் திட்ட பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Poontamalli Municipality ,MLA ,Poontamalli ,Krishnasamy ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...