×

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு

நெல்லை : நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு மாற்று இடம் கோரி மருத்துவ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 6வது நாளாக நீடிக்கிறது.பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தற்போது பட்டப்படிப்பில் 565 மாணவர்களும், பட்ட மேற்படிப்பில் 170 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியுடன் இணைந்த புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 600 முதல் 700 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால் புதிய புறநோயாளிகள் கட்டிடம் கட்டுவது மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போது உள்ள கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக கல்லூரியின் பழைய மாணவர் தொடர்ந்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே நெல்லை அரசு சித்த மருத்துவமனை புறநோயாளிகள் கட்டிடம், மாணவர்கள் விடுதி கட்டிடம் மற்றும் கல்விசார் கட்டிடம் ஆகிய உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.35.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் கல்லூரிக்கு மாற்று இடம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதனால் சித்த மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு மாற்று இடம்கோரி கடந்த 4ம்தேதி முதல் கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரே தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சனி, ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால் அந்த இரண்டு நாட்கள் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று 6வது நாளாக கல்லூரியின் முதல்வர் அலுவலகம் எதிரே மருத்துவ மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Govt Siddha Medical College ,Nellai ,Nellai Govt. Siddha Medical College ,Palayamgottai Government Siddha Medical College ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...