×

பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் 14ம் தேதி முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழா வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8.30க்கும் 9 மணிக்கும் இடையே திருவிழா கொடி ஏற்றப்படுகிறது. திருவிழாவின் 9ம் நாளான 24ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் (25ம் தேதி) பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடையும். 25ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். பங்குனி மாத பூஜைகளும், பங்குனி உத்திர திருவிழாவும் சேர்ந்து வருவதால் இந்த மாதத்தில் தொடர்ந்து 12 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் ஆன்லைன் முன்பதிவுக்காக தற்காலிக மையங்கள் திறக்கப்படும்.

The post பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Panguni Uthra festival Sabarimala temple walk ,Thiruvananthapuram ,Sabarimala ,Ayyappan ,Panguni month ,Panguni Uthra festival ,Panguni ,Sabarimala Ayyappan temple ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!