×

சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய 200 குடும்பங்கள் இழப்பீடு கோரி போராட்டம்: அதிகாரிகள் சமரசம்

திருவொற்றியூர்: சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய 200 குடும்பங்கள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, போராட்டம் நடத்தினர். மணலி அருகே மாத்தூரில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்காக சுமார் 200 குடும்பங்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் விவசாய நிலங்களை, கடந்த 1992ம் ஆண்டு ஒன்றிய கையகப்படுத்தியது. பின்னர் அந்த நிலங்களில் ஆரோமெட்ரிக் என்ற உரத் தொழிற்சாலை உருவாக்க திட்டமிடப்பட்டது.

மேலும், விவசாய நிலங்களை இழந்த உரிமையாளர்களுக்கு சிறு தொகை மட்டும் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இது மிகவும் குறைவு எனக் கூறிய நில உரிமையாளர்கள், சந்தை விலைக்கு ஏற்ப நிலத்திற்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை.

மேலும் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் இதுவரை காலியாக இருப்பதால் அந்த நிலத்தை மீண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் எனக் கூறி, நிலத்தின் உரிமையாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாதவரம் வட்டாட்சியர் ஆகியோருக்கு தனித்தனியே புகார் மனுக்களை அளித்தனர். ஆனால் இந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் கடந்த 30 ஆண்டு காலமாக வாழ்வாதாரத்தை இழந்த விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் நேற்று காலை மாத்தூரில் கையகப்படுத்தப்பட்ட தங்களது நிலத்திற்கு அருகாமையில் குடும்பத்துடன் ஒன்று கூடினர். பின்னர் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றுக் கூறி கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த மாதவரம் தாசில்தார் வெங்கடாச்சலம் மற்றும் மாதவரம் பால்பண்ணை போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்தில் நிலத்தை இழந்தவர்களுக்கு வர வேண்டிய நியாயமான இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கிய 200 குடும்பங்கள் இழப்பீடு கோரி போராட்டம்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : CBCL ,Tiruvottiyur ,Mathur ,Manali ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...