×

ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு சினிமா வில்லன் நடிகர் உட்பட 2 பேர் கைது

திருவொற்றியூர்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த 2022ம் ஆண்டு, தொழிலதிபர் அலோக் அகர்வால் என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், திருவொற்றியூர் பகுதியில் தனது பாட்டனார் பெயரில் இருந்த 16 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் சிலர் அபகரித்து விட்டனர். அந்த நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீஜா ராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் அலோக் அகர்வாலுக்கு சொந்தமான 16 கிரவுண்ட் இடத்தை அவரது பாட்டனார் இறந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து அடையாறு பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும், வில்லன் நடிகருமான அமீர்ஜான்(39) மற்றும் அவரது நண்பர் ராயபுரத்தை சேர்ந்த ஷாஜகான்(59) ஆகியோர் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.

அமீர்ஜான் ‘சாய் அமிர் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்ததும், அதன் மூலம் ‘குரங்கு கையில் பூ மாலை, திருப்பதி சாமி குடும்பம், வீம்பு என பல்வேறு திரைப்படங்களை எடுத்து அதில் வில்லனாகவும் அவர் நடித்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து வில்லன் நடிகர் அமீர்ஜான் மற்றும் ஷாஜகானை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு சினிமா வில்லன் நடிகர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Alok Aggarwal ,Chennai Police Commissioner ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்