×

மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம்

 

மஞ்சூர், மார்ச் 11: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு மாடுகளால் தொழிலாளர்கள் அவதிகுள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது.

இப்பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. கிராமங்களை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விளை நிலங்களில் காட்டு மாடுகள் கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.

காட்டு மாடுகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இப்பகுதிகளில் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டுவிட்டனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடும் காட்டு மாடுகளால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மஞ்சூரில் இருந்து குன்னுார் செல்லும் சாலையில் மகாராஜா பகுதி அருகே சாலையோர தேயிலை தோட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனால் அங்கு தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டு மாடுகளை கண்டு அஞ்சியதுடன் இலை பறிப்பதை பாதியிலேயே கைவிட்டு சென்றனர். எனவே மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manjur ,Manjoor ,Nilgiris district ,Maryland ,Mainalamattam ,Bengalamattam ,Kittatimattam ,Thenadu ,Kothiben ,Samraj Estate ,Rockland ,Dinakaran ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை