×

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் இன்று (8.3.2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணியினை மேம்படுத்தும் பொருட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டிற்கான பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி இன்று(8.3.2024) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அலுவலர்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தலைமையுரை ஆற்றியபொழுது தெரிவித்ததாவது.

இன்று மகளிர் தினம் இந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்திற்கு வருகைதந்துள்ள மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இன்று காலை மகளிர் தினத்தை ஒட்டி, கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதலமைச்சர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் பத்திரிகைத் தொண்டுகளை போற்றும் வகையில் முதலமைச்சர் தோற்றுவித்துள்ள கலைஞர் எழுதுகோல் விருது இரண்டு ஆண்டுகளாக மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று மதுரையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.என்.சாமி அவர்களுக்கு முதலமைச்சர் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு மக்களுக்குப் பல்வேறு புதிய திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிய நீங்கள் நலமா என்ற திட்டத்தை இரண்டு நாட்களுக்குமுன் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்கள்.

பத்திரிகையாளர்களை மாதத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டு திட்டத்தினால் பயன்
அடைந்தவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு அவற்றை வெற்றிச் செய்திகளாக வெளியிட வேண்டும்.

விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு இவைச மின்சாரம் வழங்கப்படுகிறது. பயன்பெற்ற விவசாயிகளைக் கண்டு திட்டத்தின் பயன் குறித்த அவர்களின் கருத்தை அறிந்து பத்திரிகைகளில் விரிவாக வெளிவர வெற்றிச் செய்திகளாக வெளிவர அதுவே. நீங்கள் நலமா திட்டமாக வெளிவர நீங்கள் சிறப்பாகச் செயல்படவேண்டும். அந்த வெற்றிச் செய்திகளைக்கூட இனி, நீங்கள் நலமா என்ற பெயரில் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.

அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்று சேரவேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு நிறைய பணிகள் உள்ளன. முதலமைச்சர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் . மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாவட்டங்களுக்கு வந்து பணி ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அவர்களுடைய வருகை தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகம் உள்ளது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர்களின் அறிவுரைகளை ஏற்று ஒருங்கினைந்து, அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெறவும், செய்தி வெளியீடுகள் முறையாக வெளிவரவும் கவனத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அரசுக்கும் மாவட்டத்திற்கும் மக்களுக்கும் செய்திகளை உறவுப்பாலமாக அமைந்து நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்திற்குச் சென்று மக்களுடன் தங்கி அவர்களுடைய கோரிக்கைகளை ஆய்வு செய்து நிறைவேற்றுவார்கள். இதேபோல, மனுநீதி திட்டமும் மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரால் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படுகின்றது.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாகிய நீங்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணி செய்து வருகிறீர்கள். மாவட்ட வருவாய் அலுவலர் கூறும் பணிகளையும் நிறைவேற்றி வருகிறீர்கள். அந்த வகையில் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாக இருக்க வேண்டிய பெரும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டங்கள் பற்றிய செய்திகளும்,மக்கள் திட்டங்களால் பெறும் பயன்களும் ஊடகங்களில் செய்திகளாக வரவேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பல அரங்கங்கள் கட்டப்படுகின்றன. நம்முடைய கலைவாணர் அரங்கம் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மிகவும் சிறந்த முறையில் பயன்படுகிறது. அதுபோல கட்டப்படுகின்ற அரங்கங்களும் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் எதிர்காலத்தில் அமைந்திட வேண்டும்.

உங்கள் மாவட்டங்களில் அமைந்துள்ள அரங்கங்கள், மணிமண்டபங்கள், சிலைகள் அனைத்தையும் தவறாமல், முறையாகப் பராமரித்திட வேண்டும் என்பது உட்பட உங்கள் பணிகள் அனைத்தையும் நீங்கள்
சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனத்
தெரிவித்தார். இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல சுப்பிரமணியன் முன்னிலையுரை ஆற்றியபொழுது செய்தி மக்கள் தொடர்பு துறையின் பெயரே இந்தத் துறையின் பணிகள் என்ன என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும். உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களும் பாலமாக இருத்தல் வேண்டும் உங்கள் தலையாய கடமை இது. அரசு யாருக்காக திட்டங்களை நிறைவேற்றுகிறதோ அவர்களிடம் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் அரசு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள், துணை இயக்குநர்கள், மண்டல இணை இயக்குநர்கள் என்றெல்லாம் பொறுப்புகளை உருவாக்கி இப்பணிகளை நிறைவேற்றவேண்டும் என்று இத்துறையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசாங்கம் நம்மிடம் எதிர்பார்க்கும் பணிகளை நாம் கட்டாயம் மிகுந்த பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும். மக்கள் தொடர்பு அலுவலர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இடையில் இணக்கமான நல்ல உறவு இருத்தல் வேண்டும். அது செய்தி மக்கள் துறையில் சிறப்பான பணிகளுக்கு உறுதுணையாக அமையும் என்று குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு இரா. வைத்திநாதன், வரவேற்புரையாற்றி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணிகளான அரசின் திட்டங்கள் குறித்த வெற்றிக் கதைகளைப் பத்திரிகைகளில் வெளிவரச் செய்தல் அரசின் திட்டங்கள் குறித்துச் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு, அவை தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரச் செய்தல், சமூக ஊடகங்களைக் கையாளுதல், தமிழரசு மாத இதழ் சந்தாக்களை அதிகரித்தல் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்

இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார். மேலும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்காகப் புத்தாக்கப் பயிற்சி பிற்பகலில் நடத்தப்பட்டது. இதில், சமூக ஊடகங்களைக் கையாளுதல் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு உண்மை அறியும் பிரிவின்(Fact Check Unit) பணி இயக்குநர் (Mission Director) திரு அயன் கார்த்திகேயன் அவர்களும், அலுவலக நடைமுறை மற்றும் நன்னடத்தை விதிகள் என்ற தலைப்பில் மனித வள ஆலோசகர் எ. சந்திரா அவர்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகர் எஸ். ராஜேந்திரன் அவர்களும் பயிற்சி அளித்தனர்

இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குநர்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில்
பணியாற்றக்கூடிய கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், மக்கள் தொடர்பு
அலுவலர்கள், மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய மக்கள் தொடர்பு அலுவலர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களும், தலைமையிடத்தில் உள்ள இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், சார்புச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Saminathan ,Chennai ,Minister ,Tamil Development ,Dinakaran ,
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...