×

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.518.26 கோடி செலவில் முடிவுற்ற 4 சாலைகள், ஒரு பாலப் பணியினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் 499 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நான்குவழித்தட சாலைப்பணிகள், திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி வட்டத்தில் 18 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 219 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள 4 சாலைப் பணிகள் மற்றும் ஒரு பாலத்தை திறந்து வைத்தல்

அந்த வகையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள். திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் வட்டங்களில் 196 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி செங்கோட்டை – கொல்லம் நான்கு வழிச் சாலை;முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டத்தில் 108 கோடியே 50 இலட்சம் ரூபாய்செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் முடிச்சூர் -திருப்பெரும்பத்தூர் நான்கு வழிச் சாலை; செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், மதுராந்தகம்மற்றும் உத்திரமேரூர் வட்டங்களில் 54 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புக்கத்துரை – உத்திரமேரூர் நான்கு வழிச்சாலை;

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் 140 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலூர் – சித்தூர் நான்கு வழிச் சாலை;திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணி நாகலாபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 18 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்;என மொத்தம் 518 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பணிநியமன ஆணைகள் வழங்குதல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 219 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநர் மரு. ஆர். செல்வராஜ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் திருமதி.ந.சாந்தி, தலைமைப் பொறியாளர் திரு.இரா.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.518.26 கோடி செலவில் முடிவுற்ற 4 சாலைகள், ஒரு பாலப் பணியினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,Mr. ,Head Secretariat ,Tirunelveli ,Tenkasi, ,Kanchipuram ,Highway Department ,Chengalpattu, Tiruvannamalai ,Tiruvallur ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...