×

தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு; அரசு உதவித்தொகையுடன் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பிற்கு உதவி தொகை உடன் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இப்பட்டயப் படிப்பினை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர்களுக்கு திங்கள்தோறும் ரூ.3000 வீதம் உதவித் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2024-25) மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. இப்பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைத்தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இப்பட்டயப் படிப்புக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.3200/- (அடையாள அட்டை உள்பட) ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்பப்பெறுதல் வேண்டும். விண்ணப்பம் (கட்செவி எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 5ம் தேதி ஆகும். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி (வெள்ளிக் கிழமை) அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.

வகுப்பு தொடங்கப்பெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். வகுப்பு வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்பு; அரசு உதவித்தொகையுடன் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,World Tamil Research Institute ,WTA ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...