திருத்துறைப்பூண்டி, மார்ச் 7: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச் சேரியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் கல்லூரி வளாகம் தூய்மைப்பணி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1 மற்றும் 2 ன் மாணவ, மாணவிகளால் செய்யப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் முதல்வர் மாறன் தலைமையில் ரோட்டரி டெல்டா முன்னாள் சங்கத் தலைவர்கள் சீனிவாசன், ரமேஷ் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ச்சியாக நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ன் அலுவலர் நந்தினி வரவேற்றார். ப்ரைட் பியூப்பிள் நிறுவனர் பிரபாகரன் பேசினார்.பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் குறித்து
செவிலியர் பயிற்றுநர் நிர்மலா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் நல்நூலகர் ஆசைத்தம்பி பேசுகையில், இறவாப்புகழ் எய்த வேண்டும் என்றால் நாம் புத்தக வாசிப்பை கை கொள்ள வேண்டும். ஒரு துறையில் தற்போதைய புதுமைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொள்ளாத மனிதர்களால் அத்துறையில் தொடர்ந்து சோபிக்க முடியாது. அந்தத் துறை சார்ந்த அறிவை பெற புத்தக வாசிப்பு துணை நிற்கிறது. நம் ஊரில் உள்ள மத வழிபாட்டு கூடங்கள், முன்னணி திரையரங்குகள், துணியகங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்ட நாம் நம் ஊரில் உள்ள நூலகங்களை தெரிந்து கொண்டோமா என்றால் இல்லை. நாம் அனைவரும் நூலகங்களுக்கு செல்ல வேண்டும். தினந்தோறும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும். இந்த சமூகத்தில் உங்களுக்கான நல்ல இடத்தை வழங்குவதற்கு புத்தக வாசிப்பு துணை நிற்கிறது என்றார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவி இலக்கியா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1 ன் அலுவலர் பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் லோகநாதன் மற்றும் வெங்கடேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
The post தினமும் அரை மணி நேரமாவது புத்தகம் வாசிப்பில் ஈடுபட வேண்டும் appeared first on Dinakaran.