×

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரியில் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 23ம் தேதி பள்ளியில் ஆண்டு விழாவின்போது, யுகேஜி படிக்கும் 5 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் இருட்டறைக்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாலினி வழக்குப்பதிவு செய்து மியூசிக் ஆசிரியரான கூடுவாஞ்சேரி அருகே ஒரத்தூர் அடுத்த நீலமங்கலத்தை சேர்ந்த காயேஷ்குமார் (40), திருநெல்வேலியை சேர்ந்த ராசையா (29) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இது குறித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்தும், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரையும் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்ட பெற்றோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் மேலும், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேற்று பள்ளிக்கு அனுப்ப வில்லை என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பெற்றோர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் காலை 8 மணி முதல் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகமும் மற்றும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Guduvancheri ,Kuduvancheri ,Vallancheri ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...