×

தேர்தலுக்காக மட்டும் தமிழகம் வரும் மோடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு

சிவகங்கை: தமிழ்நாட்டிற்கு வெள்ளப் பாதிப்புக்கு வராத பிரதமர், தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கையில் நகர் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டை எவ்வாறு வஞ்சித்தனர் என அனைவருக்கும் தெரியும். பெட்ரோல், காஸ் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெண்களுக்கு வளர்ச்சியை கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. ‘நீங்கள் நலமா’ திட்டத்தை துவங்க இருக்கிறோம். அரசு அலுவலர்கள் உங்களை தேடி வரவுள்ளனர். ஆனால், மோடி 8 முறை தமிழ்நாடு வந்து சென்றிருக்கிறார். திமுகவை ஒழிப்பேன் என்று கூறுகிறார்.

அவ்வாறு பேசியவர்கள் எல்லாம் ஒழிந்துவிட்டனர். மோடி கடந்த 10 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்பேன் எனக் கூறினார். ஆனால், அவர் ஒழிக்கவில்லை. நமது முதல்வர் சொல்லுகிற ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி வருகிறார். நீங்கள் இட ஒதுக்கீட்டை சலுகையாக பார்க்கிறீர்கள். நாங்கள் சமூக நீதியாக பார்க்கிறோம். நீங்கள் தமிழ்மொழியை ஒரு மொழியாக பார்க்கிறீர்கள். நாங்கள் உயிராக பார்க்கிறோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தமிழ்நாட்டுக்கு வராத மோடி, நீட் தேர்வினால் 22 குழந்தைகள் இறந்தபோது வராத மோடி, தமிழக மக்கள் போராடும்போது வராத மோடி, தமிழக உரிமைகளுக்காக போராடும்போது வராத மோடி தற்போது அடிக்கடி வருகிறார் என்றால் தேர்தல் வருகிறது என்பதற்காக மட்டுமே. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post தேர்தலுக்காக மட்டும் தமிழகம் வரும் மோடி: அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Minister Anbil Mahesh Thakku ,Sivagangai ,Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Nagar DMK ,Chief Minister ,M.K.Stal ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...