×

அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க கோரிக்கை

கூடலூர், மார்ச் 3: நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்ட சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் சலிவயல் ஷாஜி தலைமையில் கூடலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு தேயிலை சங்கங்கள் சார்ந்த சிறு தேயிலை விவசாயிகளுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது குறித்தும், மாவட்டத்தில் வாழுகின்ற இதர சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கூறியுள்ளதாவது:நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள தேயிலை விவசாயத்தில் சுமார் 65,000 சிறு தேயிலை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் வேளாண் துறையும், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையும் செய்ததன் அடிப்படையில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.33.75 வழங்கப்பட வேண்டும். இந்திய தேயிலை வாரியம் மாதாந்திரம் நிர்ணயம் செய்து அறிவிக்கின்ற குறைந்தபட்ச விலையும் நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

அண்மையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதி அறிக்கையில் நீலகிரியில் வாழும் சுமார் 27 ஆயிரம் கூட்டுறவு சங்க அங்கத்தினர்களாக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கிய பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் இரண்டு மானியம் வழங்க அறிவித்துள்ளது. மானியம் வழங்க முன் வந்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அல்லாத சுமார் 40,000 சிறு தேயிலை விவசாயிகள் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதால் அனைவரது நலனை கருத்தில் கொண்டு அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மானியத்தை வழங்க முன் வர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiri District Kudalur Vatta Small Tea Growers Federation ,President ,Salivayal Shaji ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...