பள்ளிபாளையம், மார்ச் 2: ஓம்காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மன் கோயில் விழா கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஐந்தாம் கரகம் நிகழ்ச்சியும், மகளிரின் ஏழாம் கரகம் தீர்த்தக்குட ஊர்வலமும் நடைபெற்றது. காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்றது. தீர்த்தக்குடத்துடன் கோயிலுக்கு வந்த பெண்கள் அம்மனை வழிபட்டு பொங்கல் வைத்தனர். மாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கன்னிமார் சுவாமிகள் தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில், 7 குழந்தைகளை கன்னிமார் தெய்வங்களாக தேர்வு செய்த மகளிர்கள், அவர்களுக்கு மஞ்சள் ஆடைகள் அணிவித்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர், அம்மனுக்கு அபிஷேக -ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் நாதஸ்வர இசையுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
The post கன்னிமார் சுவாமிகளாய் சிறுமிகள் ஊர்வலம் appeared first on Dinakaran.