×

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அளித்து வரும் பெரும் பங்கினை இந்த சாதனை எடுத்துக் காட்டுகிறது, மார்ச் மாதத்துக்குள் 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும், தொழில் வளர்ச்சிக்கு முதலமைச்சர் அளிக்கும் ஊக்கம் காரணமாக மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முதலீட்டு மாநாடுகள்,வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள். இதன்காரணமாக ஒருதொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசின் தொழில் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளை கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக, இந்நிலையை உறுதிப்படுத்தி வருகின்றது. மின்னணுவியல் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 32.52 சதவிகிதம் ஆகும். முந்தைய நிதியாண்டில் (2022-2023) மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலர் ஆகும். இந்தத் தரவுகளை ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், அதாவது 2023-24ல், 10 மாத காலகட்டத்திற்குள்ளாகவே, 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும். தமிழ்நாடு பல்வேறு துறைகளில், குறிப்பாக மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றால், அதற்குப் பல காரணிகள் உள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், முனைப்பான ஆளுமை, கொள்கை சார்ந்த அணுகுமுறை. வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம்.

உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு, இத்தகைய அபார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், இத்துறையில் கொட்டிக் கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அன்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது. தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டிற்குள். இத்துறையின் வளர்ச்சியை நன்கு துரிதப்படுத்தி, 2 இலட்சம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதே, இந்தக் கொள்கையின் உயரிய நோக்கமாகும். பல்வேறு துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியாக நல்லுறவுகள் மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. மிகச் சிறந்த மனித வளம், அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் அமைந்துள்ள சிறப்பான சூழலமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வலுவான அம்சங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. இச்சாதனையைப் பற்றிப் பேசுகையில், தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ,

“இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழ்நாடு அளித்து வரும் பெரும் பங்கினை. இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், உற்பத்திக்கான பிரதான முதலீட்டு மாநிலமாகவும், இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்குவதற்கான மையமாகவும், தமிழ்நாடு பிரகாசமாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமின்றி, எங்களின் தொழில் வளர்ச்சிப் பாதையில், மேலும் மேலும் புதிய சாதனைகளை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

The post மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,D. R. B. King ,Chennai ,Industry Minister ,T. R. B. ,king ,D. R. B. Raja ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...