×

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப்பணி கிடையாது: ராஜஸ்தான் அரசின் சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

புதுடெல்லி: ராஜஸ்தான் அரசின் ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ திட்டம் தொடர்பான சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ என்ற திட்டத்தின் கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப்பணியை பெறுவதற்கான தகுதியற்றவர்கள் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராம்ஜி லால் மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், தீபங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ தொடர்பான சட்டம் செல்லும். இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல’ என்று கூறப்பட்டது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்தது.

முன்னதாக கடந்த 2017 ஜனவரியில் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு 2018 மே மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஜூன் 1, 2002ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், ராஜஸ்தான் காவல்துறை துணை சேவை விதிகள், 1989-இன் கீழ் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ராம்ஜி லால் நீதிமன்றத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப்பணி கிடையாது: ராஜஸ்தான் அரசின் சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Rajasthan government ,New Delhi ,Rajasthan State Legislative Council ,
× RELATED இன்சூரன்சுக்கு முத்திரை தீர்வை...