×

₹1.30 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்த ராஜஸ்தான் சிந்து, கீர் கலப்பின பசு மாடு ஒரே நாளில் ₹1 கோடிக்கு வர்த்தகம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில்

வேலூர், பிப்.28: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ₹1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் ராஜஸ்தான் சிந்து, கீர் கலப்பின பசுமாடு ₹1.30 லட்சத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

நேற்று கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1300க்கும் மேற்பட்ட மாடுகளும், 250க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக நேற்று ஒட்டு மொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை சுமார் ₹1 கோடியை தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் 1300க்கும் மேற்பட்ட மாடுகள், 250க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ₹1 கோடி தாண்டி வர்த்தகம் நடைபெற்றது. கறவை மாடுகளுடன், காளைகளும் அதிகளவில் விற்பனையானது. ஒரே நாளில் ₹1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது’ என்றனர்.

பொய்கை மாட்டு சந்தையில் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் சிந்து, கீர் கலப்பின ரகத்தை சேர்ந்த ஒரு பசுமாட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார். இந்த பசு மாடு காலையில் 15 முதல் 15 லிட்டரும் மாலையில் 10 முதல் 12 லிட்டரும் பால் கறக்கும் என்று பசுவுடன் வந்திருந்தவர் கூறியதுடன் அந்த பசு சிறிது நேரத்தில் கன்று ஈன்று விடும். தற்போது பசுவின் விலை ₹1.30 லட்சம் என்று கூறினார். இந்த பசு மாட்டை விவசாயிகள், வியாபாரிகள் ₹1.15 லட்சம் வரை விலை கேட்டனர். ஆனால் மாட்டின் உரிமையாளர் ₹1.30 லட்சத்துக்கு குறைவாக விற்க மறுத்துவிட்டார். அதோடு சில மணி நேரத்தில் சந்தையிலேயே அந்த பசு மாட்டிற்கு கன்று பிறந்தது. இதையடுத்து, மாடு, கன்றுக்கட்டியுடன் மாட்டின் உரிமையாளர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

The post ₹1.30 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்த ராஜஸ்தான் சிந்து, கீர் கலப்பின பசு மாடு ஒரே நாளில் ₹1 கோடிக்கு வர்த்தகம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Sindh ,Vellore's Poigai Cattle Market ,Vellore ,Poigai Cattle Market ,Tamil Nadu ,Rajasthan Sindh ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...