×

கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர், மின் பிரச்னை குறித்து ஆலோசனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும்போது ஏற்படும் குறைபாடுகளை சமாளிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம், 12வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மாநகராட்சி தென்மண்டல துணை இயக்குநர் அமீர், மண்டல குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அடிக்கடி அறுந்து விழும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும், சாய்ந்துள்ள பழைய மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைத்து தரவேண்டும், மங்கலான மின்விளக்குகளை மாற்றி, புதிய மின்விளக்குகளை அமைத்து தரவேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, பொதுமக்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், குடிநீர் பற்றாக்குறை மின்சார பிரச்னை போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) சுரேஷ், கவுன்சிலர்கள் செல்வேந்திரன் சாலமோன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன், ரேணுகா சீனிவாசன், துர்காதேவி நடராஜன், தேவி ஏசுதாஸ், அமுதபிரியா செல்வராஜ், நலச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர், மின் பிரச்னை குறித்து ஆலோசனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,Alandur ,Municipal Corporation ,12th Zonal Office ,D.Mo.Anparasan ,
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...