சண்டிகர்: அரியானா ஐஎன்எல்டி கட்சித் தலைவர் கொலை சம்பவத்தில் பாஜக மாஜி எம்எல்ஏ உட்பட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ெடல்லி திகார் சிறையில் இருக்கும் தாதாக்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரியானா அரசியல் பிரமுகரும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் தலைவருமான நபே சிங் ரதீ, அவரது கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவரும் அம்மாநிலத்தின் ஜஜ்ஜர் மாவட்டம் பகதூர்கர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரியானா தனிப்படை போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் கட்டார் அறிவித்தார். இந்நிலையில் அரியானா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அரியானா ஐஎன்எல்டி தலைவர் நபே சிங் ரதீ கொலை வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ நரேஷ் கவுசிக் மற்றும் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பாஜகவை சேர்ந்த பகதூர்கர் நகரசபை முன்னாள் தலைவர் கரம்பீர் ரதீ, ரமேஷ் ரதீ, முன்னாள் அமைச்சர் மங்கேரம் ரதியின் மகன் சதீஷ் நம்பர்தார், ராகுல், கமல், கவுரவ் ஆகியோரும், அடையாளம் தெரியாத 5 பேரும் அடங்கும். ரயில்வே கேட் அருகே நபே சிங் ரதீ சென்ற கார் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத ஐந்து பேர் கும்பல் காரை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா ஜோதி என்ற இங்கிலாந்தில் இருக்கும் கபில் சங்வானின் மூத்த சகோதரர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. மற்றொரு தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி என்பதால், அவரிடமும் விசாரிக்கப்பட்டது’ என்று கூறினர்.
The post ஐஎன்எல்டி கட்சித் தலைவர் கொலை சம்பவம் பாஜக மாஜி எம்எல்ஏ உட்பட 11 பேர் மீது வழக்கு: திகார் சிறையில் இருக்கும் தாதாக்களிடம் விசாரணை appeared first on Dinakaran.