×

ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார்!!

சென்னை : இரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு, வெகுமதி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், ‘எஸ்’-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை – கொல்லம் இரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் திரு.சண்முகையா-திருமதி.வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் இரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் இரயில் ஓட்டுநரிடம் காண்பித்து, இரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் இரயில் விபத்தை தடுத்துள்ளனர்.

உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு இரயிலும் செங்கோட்டை இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று இரயிலை நிறுத்திய திரு. சண்முகையா – திருமதி. வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 இலட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

The post ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார்!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,Tenkasi district ,Chenkottai Vatom Pulirai village ,K. Stalin ,Chengkot Circle ,Puleirai Village ,Tamilaga-Kerala ,Chief Mu. ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...