×

சோளிங்கர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 38 சவரன் திருட்டு

*ஏஎஸ்பி நேரில் ஆய்வு

சோளிங்கர் : சோளிங்கர் அருகே ஓய்வு பெற்ற தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் 38 சவரன் தங்க நகை, ₹70 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். தகவலறிந்து ஏஎஸ்பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 25ம் தேதி அவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். வீட்டின் முன்பக்க கதவு பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 38 சவரன் தங்க நகைகள் ₹76 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரங்கநாதன் கொண்டபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடிக் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடரும் கொள்ளை சம்பவங்கள்

கிருஷ்ணாபுரத்தில் ரங்கநாதன் வீட்டில் மர்ம நபர்களால் பணம், நகைகளை திருடிச்சென்ற நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியது. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ மகள் ஜனனி என்பவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 18 சவரன் நகை திருடு போனது. இதுகுறித்து புகார் அளித்தும் மர்ம நபர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சோளிங்கர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 38 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Solingar ,Solinger ,Sawaran ,ASP ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே வேன்-கார் மோதல்: 2 பேர் படுகாயம்