×

புளியங்குடியில் கிணற்றில் தவறிவிழுந்து மூதாட்டி பரிதாப பலி

புளியங்குடி, பிப். 27: புளியங்குடி சிந்தாமணி இளம்பிள்ளை மேலத்தெருவில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் சடலமாக மிதந்தார். இதைப் பார்த்து பதறிய அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்துவந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. சஞ்சய்காந்தி மற்றும் போலீசார், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி, அதே பகுதியில் உள்ள இல்லம் பிள்ளை தெருவைச் சேர்ந்த முருகையா நாடார் என்ற விவசாயியின் மனைவி ராமலட்சுமி (77) என்பது தெரியவந்தது. மேலும் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அப்பகுதிக்கு நேற்று காலை வந்த அவர், கிணற்றின் கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post புளியங்குடியில் கிணற்றில் தவறிவிழுந்து மூதாட்டி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Buliangudi ,Puliankudi ,Chintamani Yumapillai Melatheru ,
× RELATED தென்காசியில் அதிகாலை நடந்த சாலை விபத்து: 6 பேர் உடல் நசுங்கி பலி