×

கொலை செய்யப்பட்ட ராமர்பாண்டியன் உடல் தகனம்: ஊர்வலத்தில் 6 பஸ் கண்ணாடி உடைப்பு

மதுரை: தேவேந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர் ராமர் பாண்டியன் உடலை தகனம் செய்ய ஊர்வலமாக கொண்டு வந்தபோது, 6 பஸ்களின் கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டியன் (எ) ராமகிருஷ்ணன்(38). தேவேந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர். இவர், 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவிற்கு சென்று விட்டு திரும்பி வந்த 7 பேர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்தது தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 19ம் தேதி ஆஜராகி விட்டு மதுரைக்கு பைக்கில் நண்பருடன் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அரவக்குறிச்சி அருகே காரில் வந்த மர்ம கும்பல் ராமர் பாண்டியனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ராமர் பாண்டியன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் இவரது உடலை நேற்று கரூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை அனுப்பானடிக்கு கொண்டு வந்து மயானத்தில் உடலை தகனம் செய்தனர். முன்னதாக ஊர்வலம் வரும்போது, சில இளைஞர்கள் அவ்வழியாக வந்த 6 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர். இதுதொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post கொலை செய்யப்பட்ட ராமர்பாண்டியன் உடல் தகனம்: ஊர்வலத்தில் 6 பஸ் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Devendrar Kula Makkal Sabha Party ,Rama Pandian ,Ramar Pandian ,Madurai Mela Pattanadi ,Ramarpandian ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை