×

பவர் போன ‘பவர் ஸ்டார்’ பவன்கல்யாண்: அமைச்சர் ரோஜா கிண்டல்

திருமலை: சினிமாவில் பவர் ஸ்டாராக இருந்த பவன்கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதராகிவிட்டார் என அமைச்சர் ரோஜா கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. சந்திரபாபுவின் தெலுங்குதேசம், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கூட்டணி உறுதி செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் இருதரப்பிலும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 94 தொகுதிகளில் சந்திரபாபு கட்சியும், 24 தொகுதிகளில் பவன்கல்யாண் கட்சியும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணியில் சேர பாஜக இன்னும் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: லுங்கு தேசம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 24 இடங்களை நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு வழங்கியுள்ளார்.

பவன்கல்யாணை முதல்வராக்க வேண்டும் என நினைத்துதான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர். ஆனால் சந்திரபாபுவை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என பவன்கல்யாண் பேசுவது அக்கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் `பவர் ஸ்டார்’ என அழைக்கப்படும் பவன்கல்யாண் தற்போது `பவர் இல்லாத மனிதர்’ ஆகிவிட்டார்.

இதனால்தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன்கல்யாண்.40ஆண்டு கால அனுபவம் உள்ளதாக கூறிக்கொள்ளும் சந்திரபாபு, கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என அஞ்சியே மேலும் ஒரு கட்சியுடன் (பாஜக) கூட்டணிக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

The post பவர் போன ‘பவர் ஸ்டார்’ பவன்கல்யாண்: அமைச்சர் ரோஜா கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Minister ,Roja Kindal ,Tirumala ,Roja ,Andhra ,YSR ,
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...