×

செம்பனார்கோயில் பகுதி விவசாயிகளிடம் ஒரு குவிண்டால் சம்பா நெல் ₹2300க்கு கொள்முதல்

செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் விவசாயிகளை தேடி சென்று சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2300க்கு கொள்முதல் செய்யப்பட்டது-
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் நலன் கருதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில் செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பருவநெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில் சீர்காழி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பாரதிராஜா, விற்பனைகூட பொறுப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலையில் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைகூட மேற்பார்வையாளர் பாபு, சீர்காழி விற்பனைகூட அலுவலர் குமரவேல் ஆகியோர் மேற்பார்வையில் செம்பனார்கோயில் அருகே பாகசாலை, மாத்தூர் போன்ற கிராமங்களில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இதில் சுமார் 360 குவிண்டால் ஏ.டீ.டி 46 ரக நெல் 600 மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2300-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,150-க்கும் சராசரியாக ரூ.2,200-க்கும், விலைபோனது.

இதேபோல் விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது எனவும், மேலும் மின்னணு தேசிய வேளாண் திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் கூறுகையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருப்பூண்டி, கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் விற்று நல்ல விலை பெற்றிட வேண்டும் என்று கூறினார்.

The post செம்பனார்கோயில் பகுதி விவசாயிகளிடம் ஒரு குவிண்டால் சம்பா நெல் ₹2300க்கு கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை