×

பெட்ரோல் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது

அம்பத்தூர்: முகப்பேர் வேணுகோபால் தெரு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுபோதையில் 4 பேர் ஆபாசமாக பேசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டபோது கத்தியை காட்டி மிரட்டியும், ரோட்டில் கத்தியை வீசி நெருப்பு வரவைத்தும் பீதியை ஏற்படுத்தினர். அப்போது அங்குள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வரும் சிறுவன் தட்டிக்கேட்டதால் அவனை சரமாரி தாக்கினர். மேலும் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி சவுண்ட் சர்வீஸ் கடை முன்பு வீசினர்.

பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும் அந்த சிறுவனிடம், எங்களிடம் தகராறு வைத்துகொண்டால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடி வந்தனர். ஒரு மணி நேரத்தில் முகப்பேரில் பதுங்கி இருந்த அந்த கும்பலை சேர்ந்த இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரு சிறுவர்களை தேடி வருகின்றனர்.

The post பெட்ரோல் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Mukappher Venugopal Street ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் அருகே பெண்கள் எளிதில்...